நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா

நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் என்று இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டியுள்ளார் கங்கணா ரணாவத்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கிவரும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடிக்கிறார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் ‘தலைவி’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது இந்தப் படத்துக்கான டப்பிங் பணிகளைக் கவனித்து வருகிறார் கங்கணா ரணாவத்.

இந்நிலையில் இயக்குநர் விஜய் குறித்தும், அவருடன் பணிபுரிந்தது குறித்தும் கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“அன்புள்ள விஜய்,

‘தலைவி’ படத்தின் முதல் பாதி டப்பிங் முடிந்தது. இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வருகிறது. ஆனால், இதைப் பற்றி நினைக்கும்போது எனக்கு வருத்தமில்லை. உங்கள் இருப்பு இல்லை என நான் வருந்துவதே இந்த உணர்வு என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் தேநீர், காபி, அசைவ உணவு, பார்ட்டிகள் என எதையுமே ஏற்பதில்லை என்பதை நான் உங்களிடமும் முதலில் கவனித்தேன். உங்களை நெருங்குவது சாத்தியமற்றது. ஆனால், நீங்கள் என்றுமே விலகவில்லை என்பதை நான் மெதுவாகப் புரிந்துகொண்டேன்.

நீங்கள் மிகத் திறமையானவர் மட்டுமல்ல, ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததில்லை.

உங்களைப் பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றிப் பேசினேன். உங்களைப் பற்றிப் பேசும்போது அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. நீங்கள் மனிதரே அல்ல, கடவுள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நான் உங்கள் இல்லாமையை உணர்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்”.

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே