தமிழகத்தில் ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் வரும் 30ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 27) மட்டும் 6,993 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில், ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதையடுத்து நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அதை தொடர்ந்து நாளை மறுநாள் (30ம் தேதி) மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகே ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.