பிள்ளைகளை நீங்கள் பெற்று விட்டு அரசை ஏன் கல்விக்கட்டணம் செலுத்த சொல்கிறீர்கள் ?? – பாஜக எம்எல்ஏ

குழந்தைகளை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள்; பின்னர் அரசாங்கத்தை ஏன் கல்வி கட்டணம் செலுத்த சொல்கிறீர்கள்? என்று பெண்களிடம் உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ., ஒருவர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் அவுராயா தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரமேஷ் திவாகர். இவர் செவ்வாயன்று தனது தொகுதியில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பெண்கள் சிலர் அவரிடம், அங்குள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்வது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

அதற்கு ரமேஷ் திவாகர் அந்தப் பெண்களிடம், ‘குழந்தைகளை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள்; பின்னர் அரசாங்கத்தை ஏன் கல்வி கட்டணம் செலுத்த சொல்கிறீர்கள்? ‘ என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினர்.

மேலும் அவர், அரசுப் பள்ளிகள் எதற்கு உள்ளது? அங்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாதே? நீங்கள் எல்லாம் அப்போதும் பணம் அல்லது பரிந்துரைக்கு மட்டுமே வந்து நிற்கிறீர்கள்!’ என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

விடியோவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே