கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளது. இப்பகுதியில் தேசிய பூங்காவும் உள்ளது. இங்கு ஏராளமான அரிய வன விலங்குகள் உள்ளன.
இதற்கிடையே, யானை ஒன்று அடிக்கடி ஊருக்குள் வந்து வாழை, கரும்பு உட்பட விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்லுமாம்.
இதனால் கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கெடுத்துள்ளனர்.
இதை யானை சாப்பிட்டபோது வெடி வெடித்துள்ளது. இதில் வாய் சிதறி பலத்த காயம் அடைந்தது.
இதனால் அந்த யானைக்கு பல நாட்களாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யானை நாளுக்கு நாள் மெலிந்தது.
வாயில் ஏற்பட்ட காயத்தில் ஈக்கள் மொய்ப்பதில் இருந்து தப்பிக்க யானை தண்ணீருக்குள் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி நின்றுள்ளது.
இதையடுத்து, யானையை காப்பாற்ற, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் இருந்து கரையேற்ற முயன்றனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை.
தண்ணீரை விட்டு வெளியே வரமறுத்து நின்ற யானை சிறிது நேரத்தில் இறந்தது.
தொடர்ந்து யானை உடல் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இது வன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் யானை எரிக்கப்பட்டது.
அன்னாசி பழத்தில் வெடியை வைத்து இரக்கமின்றி யானை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கேரளாவில் யானை கொல்லப்பட்டதை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கவனித்துள்ளது.
கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்.
மலப்புரத்தில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
பட்டாசில் உணவளித்து கொல்வது. இது ஒரு இந்திய கலாச்சாரம் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.