அதிமுகவில் ஒரு தொண்டன் முதலமைச்சராக வரமுடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என ஒரு கேள்வி எழுந்துள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, ” அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும்.
அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்வர் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலக்கை நிர்ணயித்துவிட்டு தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ” ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் செயலில் முதல்வரும், துணை முதல்வரும் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் இருவரையும் முன்னிறுத்தி வெற்றி பெற்றோம்.
ஒற்றுமையோடு களத்தில் சந்தித்தால் வரும் தேர்தலில் பெற்றி உறுதி. நடந்து முடிந்த தேர்தல்களை போலவே எதிர்வரும் தேர்தல்களையும் எதிர்கொள்வோம். தமிழகத்தில் தலைவர்களை முன்னிறுத்தியே தேர்தல் களம் காணப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 தேர்தல்களை சந்தித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் தலைமையையே மக்கள் விரும்புகிறார்கள். இதுகுறித்து பொதுவெளியில் பேசி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.” என குறிப்பிட்டுள்ளார்.