ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை குழும அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 90 நாட்கள் பரோலில் செல்ல பேரறிவாளன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள தமிழர்கள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் இரண்டு வருடங்களாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும்; இரண்டு வருடமாக இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த விதமான நடவடிக்கையை எடுக்காதது ஏன் என்ற கேள்வியையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.
7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியும், இன்னும் எத்துணை நாட்கள் ஆனாலும் ஆளுநர் இப்படிப்பட்ட நடவடிக்கையை கிடப்பில் போட்டு இருப்பது எப்படிப்பட்டது? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், பல்நோக்கு முகமை விசாரணை அறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதாகவும்; இந்த விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணையை வரும் திங்கள்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வு உத்தரவிட்டுள்ளது.