உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் – சீமான்

நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரல்ல, அது நமது இனத்தின் அடையாளம் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை.

உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி மக்களுக்கானது எனவும் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள், காலில் பந்து வைத்திருப்பவர்கள். ஆனால், அவர்களை சுற்று விளையாடுகிறவர்கள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பபவர்கள் என உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கால்பந்து விளையாட்டை ஒரு எடுத்துக்காட்டாக கூறினார்.

நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரல்ல, அது நமது இனத்தின் அடையாளம் என்று கருத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் பணிபுரிய வேண்டும். இந்த தேர்தல் என்பது நமக்கு ஒரு தேர்வுதான். நாம் பெரும் வாக்குகள் தான் நமது கட்சியின் வளர்ச்சி என்று குறிப்பிட்டார். முன்பு எளிய பிள்ளைகளாக இருந்தோம். ஆனால், இன்றைக்கு வலிமையான ஒரு அரசியல் இயக்கமாக மாறியுள்ளோம்.

இதற்கு காரணம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெற்ற 30 லட்சம் வாக்குகள் தான். இது நம் கட்சியின் வளர்ச்சி மற்றும் வலிமையை பிறருக்கு காட்டுகிறது. எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் நடக்காத மாவட்டத்தில் உள்ளவர்கள், தேர்தல் நடக்கும் மாவட்டத்திற்கு வந்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் இருந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே