பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய விவகாரம்..; வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளுக்கு பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் பரவி சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, “எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.

இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.

ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.

இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது.

இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே