மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார்

கேரளாவில் மூத்த மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் (வயது 84) கொச்சியின் பல்லூருதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

பிரபல மலையாள இசை அமைப்பாளர் எம்.கே..அர்ஜுனன். இவரை அர்ஜூனன் மாஸ்டர் என்றும் அழைப்பார்கள்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர், மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் மெலடி பாடல்களை கொடுத்தவர்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலமில்லாமல் இருந்தார்.

இந்நிலையில் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது.

அவரது மறைவுக்கு மலையாள பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் என்றும் மனதில் நிற்கும் பல ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார், அர்ஜூனன் மாஸ்டர். இப்போதும் அவர் பாடல்கள் மனதை மயக்குவதாக இருக்கும் என்கிறார்கள்.

கேரளாவில் பிறந்த இவர், பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா என்ற விடுதியில் வளர்ந்தார். அங்கு ஆர்மோனியம் வாசிக்கவும் இசையையும் கற்று தேர்ச்சிப் பெற்றார்.

பின்னர் பஜனை பாடல்களை பாடி வந்த அவரது திறமையை பார்த்த ஆசிரமத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு இசைக்கல்வி அளித்தனர்.

அதன்படி இசைக் கற்று தேர்ச்சி பெற்ற அவர், நாடகங்களுக்கு இசை அமைத்தார்.

பல நாடக கம்பெனிகளின் நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளார். சுமார் 300 நாடகங்களில், 800 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

பின்னர் பிரபல இசை அமைப்பாளர் ஜி.தேவராஜனிடம் ஆர்மோனியம் வாசிப்பதற்காக சேர்ந்தார்.

அவர் இசை அமைத்த பல படங்களுக்கு இவர்தான் ஆர்மோனியம் வாசித்தார்.

1968 ஆம் ஆண்டு வெளியான ‘கறுத்த பௌர்ணமி’ படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனார்.

பின்னர் தொடர்ச்சியாக இசை அமைத்து வந்த அவர், மலையாளத்தில் சிறப்பான இசையை உருவாக்கியவர் என்று புகழப்படுகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர், இவருடன் இணைந்து பணியாற்றியவர்.

அந்த காலகட்டங்களில் ஏ.ஆர்.ரகுமான் எங்கள் ஸ்டூடியோவுக்கு வருவார். அவருக்கு சுமார் 12 வயதிருக்கும். அப்போதே நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை கவனிப்பார். நாங்கள் வெளியே சென்றதும் ஹார்மோனி யத்தை இசைத்து பயிற்சி பெறுவார் என்று அர்ஜூனன் மாஸ்டர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே