உசிலம்பட்டி பெண் சிசு கொலை..; செயற்கையாக மூச்சு திணறல் என கண்டுபிடிப்பு..!!

உசிலம்பட்டி சிசு உயிரிழப்பில், குழந்தை செயற்கையாக ஏற்பட்ட மூச்சுதிணறலால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதி.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 ஆம் தேதி மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள தங்களது வீட்டிற்கு வந்த இந்த தம்பதி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததாக கூறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில்  பிரேதபரிசோதனை முதற்கட்ட ஆய்வில், குழந்தை செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுதிணறலால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது குறித்து மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவிருப்பதாகவும்; உரிய விசாரணை நடத்தி இதில் அவர்களின் உறவினர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே