அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போதுமான மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறேன்.
அப்படி செய்வதன் மூலம் சென்னை புளியந்தோப்பில் மின்கம்பியை மிதித்து ஒரு பெண்மணி உயிரிழந்ததைப் போன்ற வேதனை தரும் உயிர்ப்பலிகளைத் தவிர்க்க முடியும்.
மழைக்காலத்தின் தொடக்கத்திலேயே இந்த நிலை என்றால் இனிவரும் நாட்களில் கூடுதல் கவனத்தோடு அரசு நிர்வாகம் இயங்க வேண்டிய அவசியத்தை புளியந்தோப்பு சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
மேலும் அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களைத்தொடர்ந்து கண்காணித்து கன மழை-வெள்ளம் வந்தால் மக்கள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
இதற்காக அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மாவட்டம்தோறும் மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.