நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதையடுத்து மக்கள் பலரும் நீட் குறித்து அரசை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில்,
“கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்.
நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை ‘பலியிட’ நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.” உள்ளிட்ட கருத்துக்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்து பலரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடிகையும், பாஜக கட்சி பிரமுகருமான காயத்ரி ரகுராம், சூர்யாவின் அறிக்கையை சாடி பதிவிட்டுள்ளார்.
அதில் “தங்கள் நடிகர்களின் முதல் நாள் முதல் காட்சியைக் கொண்டாட ரசிகர்கள் தங்கள் சொந்தக் காசை செலவழித்து பேனர் வைக்கும் போது அது அவர்கள் மீது விழுந்து இறக்கிறார்கள்.
அதனால் திரைப்படங்களை தடை செய்துவிடலாமா? அதில் எந்தவித லாஜிக்கும் இல்லை அல்லவா? தயவு செய்து மாணவர்களை படிப்பதற்கு ஊக்குவியுங்கள்.
மருத்துவர்கள் – தினமும் தங்கள் நோயாளிகளை பரிசோதிப்பது மருத்துவர்க்ளுக்கு ஒவ்வொரு நாளும் தேர்வு எழுதுவது போல தான்.” என்று தெரிவித்துள்ளார்.