கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பி.வெற்றிவேல் (முன்னாள் எம்எல்ஏ,) நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “துணிச்சலின் இருப்பிடமாகவும்; தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த கழகத்தின் பொருளாளரும், என் அருமை நண்பருமான திரு.வெற்றிவேல் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெற்றிவேல் (முன்னாள் எம்எல்ஏ,) திருவுருவப்படத்திற்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது, கழக தேர்தல் பிரிவு செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான, முன்னாள் அமைச்சர் G.செந்தமிழன், கழக கொள்கை பரப்பு செயலாளர் C.R.சரஸ்வதி, கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான ம.கரிகாலன் உள்ளிட்டோர் உடனிருந்து வெற்றிவேல் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.