சி.ஏ.ஏ, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாங்கள் ஒருபோதும் இதில் தலையிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

2 நாள் பயணத்தின் நிறைவாக, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக மீண்டும் அறிவித்தார்.

சர்வதேசஅளவில் தலைதூக்கி உள்ள தீவிரவாதத்தை ஒழிப்பதே தங்கள் இலக்கு என உறுதி பட தெரிவித்த டிரம்ப், இந்தியாவில் தீவிரவாதத்தை பிரதமர் மோடி நிச்சயம் ஒழிப்பார் என்றார்.

நரேந்திர மோடி, மிகச்சிறந்த தலைவர் என்றும் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழிலதிபர்கள், ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

எரிசக்தி துறையில், உலகிலேயே அமெரிக்கா முதலிடம் வகிப்பதாக பெருமிதம் தெரிவித்த டிரம்ப், பாதுகாப்பு – ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது என்றார்.

மதசுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாக விளக்கம் அளித்த டிரம்ப், மக்கள் மத சுதந்திரத்துடன் வாழ்வதையே இந்திய மக்கள் விரும்புவதாக பிரதமர் மோடி கூறியதாக குறிப்பிட்டார்.

மத சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் பிரதமர் மோடி அயராது பாடுபடுவதாகவும் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே