தமிழகத்தில் இன்று (மே 31) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆகவும், 173 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 95 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
மொத்த பாதிப்பு 22,333 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,807 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
இன்று சென்னையில் 10 பேரும், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கலில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,286 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,995 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,052 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.