டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற 16 வயது இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்
டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சியா கக்கார். 16 வயதே ஆன இவரின் வீடியோக்கள் வைரல் ஹிட் அடிக்கக் கூடியது.
டிக்டாக்கில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில், அவர் திடீரென இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டிக் டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சியா இயங்கி வந்தார். சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது தற்கொலை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
“இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையினால் இருக்கலாம். வேலையைப் பொறுத்தவரை அவர் நன்றாகவே இருந்தார். சியா ஒரு பிரகாசமான திறமைசாலி” என்று அவரது மேலாளர் கூறியுள்ளார்.
ஜூன் 14-ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.