இதுவரையில் பார்த்ததில் இதுதான் சிறந்த இந்திய அணி: மே.இ.தீவுகள் லெஜண்ட் கிளைவ் லாய்ட் பாராட்டு மழை

ஆஸ்திரேலியா போன்ற ஒரு முற்றிலும் அன்னியமான சூழ்நிலையில் இந்தியா சமீபத்தில் தொடரை 2-1 என்று வென்றது, இது ஒரு தனித்துவமான வெற்றி, ஆகவே இதுவரையிலான இந்திய அணிகளில் ஆகச்சிறந்த இந்திய அணி இதுதான் என்று கிளைவ் லாய்ட் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆஸ்திரேலியா போன்ற ஒரு முற்றிலும் அன்னியமான சூழ்நிலையில் இந்தியா சமீபத்தில் தொடரை 2-1 என்று வென்றது, இது ஒரு தனித்துவமான வெற்றி, ஆகவே இதுவரையிலான இந்திய அணிகளில் ஆகச்சிறந்த இந்திய அணி இதுதான் என்று கிளைவ் லாய்ட் புகழ்ந்து தள்ளியுள்ளார்

கோலி கேப்டன்சியில் 36 ஆல் அவுட் என்று படுதோல்வியடைந்த பிறகு அவர் நாடு திரும்பினார், பிறகு ரகானே தலைமைப்பொறுப்பை ஏற்றார், மிகப்பொறுமையாக ஆனால் உள்ளுக்குள் ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்த ரகானே தன் சொந்த சதத்தினால் அணிக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்ததோடு பவுலர்களையும் பிரமாதமாகக் கையாண்டு களவியூகத்திலும் தேர்ந்த கேப்டன் போல் செயல்பட்டு மெல்போர்னில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

பிறகு சிட்னியில் புஜாரா, ரிஷப் பந்த் அதிரடியில் 406 ரன்கள் இலக்கை விரட்டும் அளவுக்கு சென்றனர். ஆனால் பந்த், புஜாரா ஆட்டமிழக்கவே 200 பந்துகளுக்கும் மேல் அஸ்வின், ஹனுமா விகாரி நின்று பிரமாதமான டிராவை அரங்கேற்றி மேடை அமைக்க பிரிஸ்பன் மைதானத்தில் நடராஜன், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபாமற்ற பவுலர்களை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலிய கோட்டையைத் தகர்த்தார் ரகானே. இந்தியா 2-1 என்று தொடரை வென்றது.

இந்நிலையில் டெலிகிராப் பத்திரிகைக்கு 2 முறை உலகக்கோப்பை வென்ற லெஜண்ட் கிளைவ் லாய்ட் கூறியதாவது:

இந்திய அணி சிறந்த அணியாகி விட்டது, ஏனெனில் அவர்களிடம் வெரைட்டி உள்ளது. வீரர்கள் உடல்தகுதியுடன் இருக்கிறார்கள், தொழில்பூர்வமாக ஆடுகின்றனர். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருமுறையும் பின்னடைவு கண்டு எழுச்சி பெற்றதை மறக்க முடியாது. அந்தத் தொடரில் இந்திய அணி ஆடிய ஆட்டத்தை வைத்துப் பார்க்கும் போது இதுதான் இதுவரையிலான சிறந்த இந்திய அணி.

இந்திய வெற்றிகளில் ஜஸ்பிரித் பும்ராவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் ஆச்சரியகரமான ஒரு பந்து வீச்சை அவர் வீசக்கூடிய திறமை படைத்தவர்.

ஆக்ரோஷ பவுன்சரையும் வீசுகிறார், ஓடி வந்து ஸ்லோ பந்துகளையும் திறம்பட வீசுகிறார். இவரால்தான் இந்தியா இன்று இந்த இடத்தில் இருக்கிறது. அணி போராடிக் கொண்டிருக்கும் போது பும்ரா விக்கெட்டுகளைக் கைப்பற்றி உதவுகிறார்.

இவ்வாறு கூறினார் கிளைவ் லாய்ட்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே