முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில் அதிமுக தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்றுது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர் சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அதிமுக அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில், ஆலோசனைக்கு பின் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அதில், “சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தலைமைக்கழகம் முறையாக ஆலோசித்து உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் பாஜக தேர்தலை சந்தித்தது.
அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். விபிதுரைசாமி தற்போது ஒரு கட்சியில் உள்ளார். முன்பு வேறு ஒரு கட்சியில் இருந்தார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை.
சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.