மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கவே, சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாக, மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ.,யில் 9 முதல் 12ம் வகுப்புகள் வரை பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட விபரங்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பாடத்திட்ட குறைப்பின்படி, இந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பில், ஜனநாயகம், பாலினம், மதம், ஜாதி மற்றும் ஜனநாயகத்தை காக்க நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1 வகுப்பில், குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை, மாநில அரசு களின் வளர்ச்சி மற்றும் கூட்டாட்சி தொடர்பான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2வில், பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் நாடுகளுடனான உறவுகள், இந்திய பொருளாதார மேம்பாடு, சமூக போராட்டங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவை தொடர்பான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
குடியுரிமை, பண மதிப்பிழப்பு, மதச்சார்பின்மை போன்ற விவகாரங்கள், நாட்டில் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய சம்பவங்களை படிக்க வேண்டியதில்லை என்ற நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிக்கை :
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டது.
அதில் உள்நோக்கம் இல்லை.
நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. கல்வியில் அரசியலை புகுத்துவதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.