ஒச்சாத்தேவர் எனபவரின் மகனான ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 14ஆம் தேதி 1951ஆம் ஆண்டு பிறந்தார்.ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார்.

இவர் ஓ.பி.எஸ் என்று அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து வருகின்றார்.

உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்:

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.

நகர்மன்றத் தலைவர் – பெரியகுளம் நகராட்சி, (1996-2001)

சட்டமன்றப் பங்களிப்புகள்:

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு தேர்தல்:

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, 2001)

தமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 – மார்ச் 1, 2002)

பொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 – டிசம்பர் 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு தேர்தல்:

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளைப் ஏற்றுப் பணியாற்றினார்.

2011 ஆம் ஆண்டு தேர்தல்:

2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் – 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.

2016 ஆம் ஆண்டு தேர்தல்:

2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் – 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.

தமிழக முதல்வராக..

முதல் முறை:

டான்சி வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

இரண்டாம் முறை:

27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார்.

தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து 22.05.2015 அன்று நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மூன்றாவது முறை:

5 டிசம்பர் 2016 அன்று முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, பன்னீர் செல்வம் 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 5 பிப்ரவரி 2017 அன்று தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என ஆளுநர் அறிவித்தார்.

இந்நிலையில் 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார்.

இதன் பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

துணை முதல்வர்:

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகஸ்ட் 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.

வாழ்க்கைக் குறிப்பு:

தேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்தவர். அங்குள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பில் தேறினார்.

பின்னர் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றவர். இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும் இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

ராஜா என்ற தம்பியும் உள்ளார்.

இந்தமுறையும் ஓபிஎஸ் போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதியில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே