திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மகன் திருமூர்த்தி (47). இவர் 31 வருடமாக எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் ஜம்மு காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருந்த போது கடந்த 26 ம் தேதி இரவு துப்பாக்கி குண்டு வெடித்ததில் திருமூர்த்தி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திருமூர்த்தி சிகிச்சை பலனின்றி 31ந் தேதி மாலை உயிரிழந்துள்ளார்.
திருமூர்த்தியின் உடல் இன்று விடியற்காலை 5 மணிக்கு அவரது சொந்த கிராமத்திற்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொண்டு வந்தனர்.
திருமூர்த்தியின் உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆனந்த் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உள்ளிட்ட அதிகாரிகள், கிராம பொது மக்கள் , மற்றும் உறவினர்கள் , அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அவரது உடலை எல்லை பாதுகாப்பு வீரர்கள் அலங்கரித்த வாகனத்தில் முத்துபாடி குளக்கரையில் அருகில் உள்ள மயானத்திற்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க திருமூர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
காஷ்மீரில் மன்னார்குடியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.