மதுக்கடைகளை மூடக் கூறிய உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி வண்ணங்களில் டோக்கன்கள் விநியோகப்படும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கடலூரில் காலை 8 மணிக்கே டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கிய நிலையில், மது வாங்க நீண்ட வரிசையில் மது குடிப்போர் காத்து கிடந்தனர்.
மாவட்டத்தில் மொத்தம் 134 கடைகள் திறக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட்டது.
திருச்சியில் தடைசெய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், நீண்ட வரிசையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுகுடிப்போர் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.