விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தமிழக அரசு சட்டம்…!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றி இருக்கிறது.

விவசாயிகளின் வருமானம் பெருகுவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்ட ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி அளித்ததை அடுத்து, அதனை உடனடியாக செயலாக்கத்திற்கு கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒப்பந்த சாகுபடி முறையில் ஈடுபடும் வேளாண் பெருமக்களின் நலனைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என 2018 – 2019 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.

அதற்கு இணங்க தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்ட முன்வடிவு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

அந்த சட்டத்திற்கு தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று பிரத்யேகமாக எந்த சட்டமும் எந்த மாநிலத்திலும் இதுவரை இயற்றப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனிச் சட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள் அல்லது உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளைபொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒப்பந்தம் செய்த அன்று, நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளர் அந்தப் பகுதியை சார்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தினை அலுவலர் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகும் நிலையில், இந்த சட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்த வித பொருள் மற்றும் பண இழப்பும் ஏற்படாமல் முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பண்ணைய சட்டத்தில் கொள்முதலாளரோ அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனமோ ஒப்பந்த விதிகளை மீறும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து விவசாயிகளின் விளைபொருட்களுக்குரிய தொகையைப் பெற்றுத் தரும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இச்சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து, முழுச் செயலாக்கத்திற்கு கொண்டு வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே