விமானி ஒருவர் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் ப்ரிய விக்னேஷ். இவரது தந்தை திருவனந்தபுரத்தில் கடை ஒன்றை நடத்திவருகிறார். அவரது தாய் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.
தேனியை பூர்வீகமாக கொண்ட ப்ரிய விக்னேஷுக்கு சிறுவயது முதலே விமானியாகவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ப்ரிய விக்னேஷ்
அதனை அடுத்து, பல தடைகளை தாண்டி விமானிக்கான பயிற்சி மேற்கொண்டு தற்போது இண்டிகோ விமான சேவை நிறுவனத்தில் விமானியாக பணியாற்றிவருகிறார்.
அவர், சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பை அளித்துள்ளார். காவிரி, கொள்ளிடம், ஸ்ரீ ரங்கம் குறித்து அவர் தமிழில் அறிவித்துள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டுவருகிறது. பொதுவாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் விமானங்களில் அறிவிப்பு வெளியாகும் நிலையில் தமிழில் அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதுகுறித்து விமானி ப்ரிய விக்னேஷ் பேசியபோது, “முதலில் தமிழில் அறிவிப்பை வெளியிட தயக்கமாக இருந்தது.
ஆனால், என் சக விமானி சஞ்சீவ் என்னை ஊக்கப்படுத்தினார். அவர் ஒரு வட இந்தியர்.
ஆனால், அவர் அனைத்து இடங்களையும் சரியாக கூறுவார், தமிழகத்தில் உள்ள இடங்களை நீ அறிவித்தால் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பின்னர் எனக்கு ஊக்கமளித்தது இண்டிகோ விமான நிறுவனமும் தான். அவர்கள் இல்லை என்றால் இது நடந்திருக்காது.
தமிழகத்திற்கு உள்ளான பயணங்களில் 90% பேர் தமிழர்கள் என்பதால் தமிழில் அறிவிக்கும்போது மனதுக்கு நெருக்கமாக இருப்பதுபோல் உணர்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.