அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு மிக அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து அதிபர் டிரம்ப் பாதுகாப்புடன் வெளியேறினார்.
அமெரிக்காவில், கொரோனா பரவல் தொடங்கியது முதல் தற்போது வரை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டின் நிலை தொடர்பாகவும், கொரோனாவை எதிர்த்து அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை குறித்து பேசுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்றும் வெள்ளை மாளிகையில் இதே போன்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, அதிபரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அருகில் வந்து ட்ரம்ப்பின் காதில் ஏதோ முணுமுணுத்தார். அதன் பிறகு `என்ன நடக்கிறது?’ என்று கேட்டுவிட்டு, செய்தியாளர்கள் அறையிலிருந்து வெளியேறிய அவர், ஒன்பது நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தார்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “வெள்ளை மாளிகைக்கு அருகில் ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவரை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இது ஓர் எதிர்பாராத சம்பவம். ஆனால், தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். உடனே சுதாரித்துக் கொண்ட ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மட்டுமே காயமடைந்ததாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.