கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர்.
அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர்.
இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கொரோனா அச்சத்தால் 32 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அதனால் அந்த தேர்வுகள் மீண்டும் ஜூன் 18 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் அந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வை எழுதாத மாணவர்கள் மீண்டும் அந்த தேர்வை எழுத ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வை தவறவிட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதியவுடன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.