பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்திற்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்..!!

அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று இருநாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (மாா்ச் 26) வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார்.

வங்கதேசத்தின் தேசிய தின கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபூா் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டமும் அன்றைய தினம் தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் குடியரசுத் தலைவா் அப்துல் ஹமீதையும் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் காவல்துறையினர் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

இதில் 40 மாணவர்கள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமரின் இந்த இருநாள் பயணத்தின்போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என வெளியுறவு செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்கலா ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே