கரோனா தொற்று சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
கரோனா சிகிச்சைக்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்த கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மீது பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.
தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதற்காக அரசே கட்டணம் நிர்ணையித்திருந்தது.
இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அதுகுறித்த ட்விட்டர் பதிவு:
‘கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் – Bewell தனியார் மருத்துவமனைக்கு, கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது’.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என எச்சரிக்கும் ட்விட்டர் பதிவு:
‘கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.