கொரோனா தொற்று பரவல் காரணமாக கடன் தவணை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்ய முடியுமென உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பொது முடக்க காலத்தில் வங்கி தவணை உரிமை காலத்துக்கான தொகைக்கு வட்டிக்கு வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கொரோனா காரணமாக மாத தவணை செலுத்தும் “கடன் தவணை ” ( EMI ) உரிமை காலத்தை 2 வருடங்கள் வரை நீட்டிப்பு செய்ய முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.
கடுமையான பிரச்னையை சந்தித்து வரும் துறைகளை கண்டறிந்து அவற்றை மீட்டு வரக் கூடிய பணிகளை செய்யும் வழியினை கண்டறிந்து வருவதாகவும் தெரிவித்தது.
அதேபோல வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான பிரச்னைகளை களைய சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், நீதிபதிகள் ஏற்கனவே 3 முறை வழக்கை ஒத்தி வைத்து விட்டதால் நாளைய தினம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.