ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின் விளைவு 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக அரசு ஆலைக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக வழக்கின் தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அரசின் தடை தொடரும் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்,மதிமுக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்,ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் இந்த வழக்கின் சம்மந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.