முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தனபால் இன்று காணொலி காட்சி மூலம் விசாரணை மேற்கொள்கிறார்.
கடந்த 2017 ம் ஆண்டு ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டு அணியாக செயல்பட்டபோது, அரசு மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகரே உரிய முடிவெடுப்பார் என தெரிவித்தது.
இதையடுத்து 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தற்போது 11 உறுப்பினர்களுடன் இன்று காணொலி காட்சி மூலமாக சட்டப்பேரவை சபாநாயகர் விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.
அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் கேட்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக அவைத் தலைவர் மது சூதனன், உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
இதையடுத்து, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திநகர் எம்.எல்.ஏ சத்யா, அதிமுக வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மதுசூதனைனை சந்தித்தனர்.
அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பரபரப்பான விவாதம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிச்சாமி சில ஆவணங்களை காண்பித்து, அவரது ஒப்புதலை பெற்றதாக கூறப்படுகிறது.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு தொடர்பாக, அதிமுக தலைமை கழகத்தில் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.