கடந்த பல ஆண்டுகளாக பின்னணி பாடகியாக இருந்து வரும் எஸ்.ஜானகி அவர்களின் உடல்நிலை குறித்து திடீரென சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி.
தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் 5 மொழிகளில் பின்னணி பாடியுள்ள இவர் 5 தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் தனது மகனுடன் வசித்து வரும் எஸ்.ஜானகியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தவறான வதந்திகள் உலவி வருகின்றன.
அவ்வாறு இந்த முறையும் அவரது உடல் நலன் பற்றி சமூகவலைதளங்களில் வதந்தி பரவ அதை அவரது மகன் முரளி கிருஷ்ணா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அம்மாவுக்கு சிறிய அறுவை சிகிச்சை ஒன்று நடந்திருக்கிறது.
தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நலமாக உள்ளார்.
எனவே தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
அதேபோல் இசையமைப்பாளர் தீனா கூறுகையில், தற்போது எஸ்.ஜானகி பற்றி தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
இதுபற்றி நான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் பேசினேன். உடனே அவர் எஸ்.ஜானகி அம்மாவை தொடர்புகொண்டு பேசினார்.
நல்லமுறையில் சந்தோஷமாக ஆரோக்கியத்துடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த பயமும் இல்லை. அவர்கள் தரப்பில் ஒரு காமெடியான விஷயத்தையும் சொன்னார்கள். இதுவரை என்னை 6 முறை கொன்று விட்டார்கள். தவறான செய்தியை பரப்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.