முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு – ராமநாதபுரம் விரைந்த தனிப்படை போலீசார்..!!

பாலியல் புகாருக்கு ஆளான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகி இருப்பதால் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாததால் சைபர் துறையின் உதவியுடன் மணிகண்டனின் செல்போன் சிக்னலை வைத்து அவரைத் தேடிவருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் அவர் தனது செல்போனை பயன்படுத்தாமல் தனது உதவியாளரின் செல்போனை பயன்படுத்தி தொடர்ந்து பேசிவருவதாக காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.

அதன்படி மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், மணிகண்டனுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் அவர் அமைச்சராக இருந்தபோது உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள் ஆகியோரின் பட்டியலை சேகரித்து விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். 

இதற்கிடையில், ராமநாதபுரத்திற்கு சென்ற தனிப்படை அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

முன்னதாக, மணிகண்டன் மனைவி வசந்தி தனது குடும்ப வாழ்க்கை சிதைக்கும் நோக்கத்தோடும், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு துணை நடிகை சாந்தினி தனது கணவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டதாக கூறி துணை நடிகை சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்கள் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்பி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை விசாரிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி கார்த்தி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே