சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என்றும், அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டியவை எனவும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவரை கண்டித்த எஸ்.ஐ., பாலு மீது அந்த நபர் மினி லாரியை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ம.நீ.மை கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை :

பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளை திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு. 

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.

குடியிலிருந்து மீள நினைக்கும் குடிநோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும்.

எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே