சாத்தான்குளம் கொலை : ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் சிபிஐ வழக்கு விசாரணையை கையில் எடுத்த நிலையில், முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

இதனையடுத்து இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 3 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில், சிபிஐ போலீசார் விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கைது விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஸ்ரீதர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே