சாத்தான்குளம் சிறுமி கொலை விவகாரம்: பாலியல் ரீதியான துன்புறுத்தல் இல்லை என உடற்கூறாய்வில் தகவல்

சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் பாலியல் ரீதியில் சிறுமி துன்புறுத்தல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கல்வினை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி உச்சிமாகாளி. இவர்களுக்கு இசக்கிமுத்து என்ற மகனும், 8 வயதாகும் முத்தார் என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேகர் மற்றும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார்.

நேற்று முன்தினம் மதியம், வடலிவினை இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள சிறிய பாலத்தின் அடியில் முத்தார் என்ற அந்த 8 வயது சிறுமி, தண்ணீர் பிடிக்கும் ட்ரம்மில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி, மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் மற்றும் நிதிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சிறுமியின் உடல்கூறு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.அதில், கழுத்து இறுக்கப்பட்டதில் சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பாலியல் ரீதியில் சிறுமி துன்புறுத்தல் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே