சேலம் மாவட்டம் மேட்டூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்புகள் புது வேகமெடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 86,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் கொடிய தாக்குதலுக்கு இதுவரை 1141 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதாவது, முழு போக்குவரத்து முடக்கம், காய்கறி கடைகள், தியேட்டர்கள், கோவில்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் இறப்பு நிகழ்வுகள் என பல்வேறு இடங்களில் பெருமளவு கூட்டங்கள் தவிர்க்கப்படவேண்டுமென்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
சேலத்தில், இதுவரை கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 753ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21ம் தேதி உடல்நலகுறைவால் உயிரிழந்துள்ளார்.
அப்போது அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர், கிராமம் முழுவதும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.