கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.643 கோடி வழங்கியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
கே.எஸ்.அழகிரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் சமஸ்கிருத மொழியை பரப்புவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 643.83 கோடி ரூபாயை மத்திய பாஜக அரசு செலவழித்திருக்கிறது.
செம்மொழி தகுதிபெற்ற தமிழ் மொழிக்கு கடந்த மூன்றாண்டுகளில் ரூ.22.94 கோடி தான் மொத்தமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் உள்ளிட்ட மொழிகள் மீது எத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டு வருகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் புறக்கணித்து விட்டு சமஸ்கிருதத்திற்கு மட்டும் நிதியை வாரி வழங்கியிருக்கிறது.
தமிழ் மொழியை வளர்க்க நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதை விட ஒரு இரட்டை வேடம் வேறு ஏதும் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.