மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அறிவிப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 02) வெளியிட்ட அறிக்கை:

“நிவர் புயல் காரணமாக, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் 27.11.2020 அன்றே உத்தரவிட்டிருந்தேன்.

தற்போது, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் வரவேற்புப் பந்தலில் காற்று அடித்து கம்பம் சரிந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஆக மொத்தம் 10 லட்ச ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே