பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அரசு நிறைவேற்றிய பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, அவரது தாயார் அற்புதம் அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, ராஜீவ் காந்தி கொலையில் காவல்துறையினர் உட்பட பல அப்பாவி மக்களும் உயிரிழந்ததை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் நிராகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முழு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், அதனை நிலுவையில் வைக்கக் கூடாது என்றும், எல்லாவற்றிற்கும் கால நிர்ணயத்தை அரசியல் சாசனம் வகுத்து உள்ளதாவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து, வரும் 29-ம் தேதிக்குள் அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.