விழுப்புரத்தில் முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி மாணவி ஜெயஸ்ரீ யை எரித்துக் கொன்றவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜெயபால் என்பவரின் 15-வயது மகள் மர்மநபர்கள், கை கால்கள் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பலத்த தீக்காயம் அடைந்த சிறுமி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து உள்ளார்.
தன்னை, இருவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக சிறுமி மரண வாக்குமூலம் அளித்ததையடுத்து, கலிய பெருமாள் (வயது 60), முருகன் (வயது 51) ஆகிய இருவர் மீதும் கொலை தொடரப்பட்டு, கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுமதுரை காலனி கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி பொறுப்பில் இருந்து கே. முருகன் மற்றும் புதுக்காலனி கிளைக் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து கலிய பெருமாள் நீக்கப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும், முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி மாணவி ஜெயஸ்ரீ யை எரித்துக் கொன்றவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.