சென்னையில் 28-ஆம் தேதி வரை போராட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் நீட்டித்தது.
மேலும் தளர்வுகள் குறித்த முடிவை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது.
இதனிடையே சென்னையில் சமீபத்தில் வெளிமாநிலத்தவர்கள் பலர் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்குமாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் 28-ஆம் தேதி வரை போராட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில்,” தமிழ்நாடு காவல் சட்டம் 1888 பிரிவு 41 உட்பிரிவு (2) இல் அளிக்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில், போக்குவரத்துப் பகுதிகளில், சாலை தெருக்களில், கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனித சங்கிலி அமைப்பது போன்றவற்றை நடத்தவும் 13.05.2020 அன்று 2 மணி முதல் 28.05.2020 வரை இரு நாட்கள் உட்பட, 15 நாட்களுக்கு தடை விதித்து ஆணையிடப்படுகிறது.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.