அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய கடிதம் குறித்து பிரதமர் ட்வீட்..!!

வேளாண் சட்டம் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் தோமர், எழுதிய கடிதத்தை படிக்குமாறு, பிரதமர் மோடி, தமிழில் டுவிட் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டில்லி எல்லையில், கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவசாய சட்டம் தொடர்பாக, விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான் ஒரு விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்தே, விவசாயிகளின் கடினமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன். 

புதிய சட்டங்களை அமல்படுத்திய பின்னர், நாடு முழுவதும் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். சில மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறைந்தபட்ச ஆதார விலை இருக்காது என அரசியல் காரணங்களுக்காக பொய்யுரை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை மாறப்போவதில்லை.

வேளாண்துறையில் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமிடும் விதத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த சட்டங்கள், கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் விவசாயிகளை செயல்பட வைக்கும்.

கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அரசு விவசாயிகளுக்காக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை எங்கு வேண்டுமானாலும் விற்க அரசு, கூடுதல் வாய்ப்பை வழங்கியுள்ளது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்ட பதிவு: வேளாண் துறை அமைச்சர் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன்.

இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், தோமர் தமிழில் எழுதிய கடிதத்தின் நகலையும் அதில் இணைத்துள்ளார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/file/FarmerLtrtamilcomp9IJO.pdf

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே