பிரபு சாலமனின் ‘காடன்’ வெளியானது

ராணா, விஷ்ணு விஷால், ஜோயா, ஷ்ரியா, பிரபு சாலமன், ஷாந்தனு மொய்த்ரா கூட்டணியில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்திருக்கிறார் ராணா. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘காடன்’ படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார் ராணா டகுபதி. விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.

3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து தாய்லாந்து, கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரும் காடுகள், மலைகளில் படமாக்கியுள்ளது படக்குழு. திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அதன் பிரமாண்டம் தெரியும் என்பதால் தியேட்டரில் தான் ‘காடன்’ வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதையடுத்து 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘காடன்’ திரைக்கு வரும் என்று ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் ‘காடன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே