நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு!

நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளும் திகார் சிறையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

முன்னதாக, மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நள்ளிரவு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,

நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது. நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பையும், மரியாதையும் உறுதி செய்வது மிக முக்கியமானது.

பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்றனர்.

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பெண்களுக்கு அதிகாரமளிக்கும் தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும், பெண்களுக்கு அனைத்திலும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே