மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவிருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி திறக்கப்பட்டன.

முதற்கட்டமாக பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்ட நிலையில், கடந்த 8ம் தேதி 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின.

பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டிருப்பதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இதனிடையே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 40% பாடத்திட்டங்களை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மே 3ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மே 3ம் தேதி மொழிப்பாடம் மே 5ம் தேதி ஆங்கிலம் மே 7ம் தேதி கணினி அறிவியல் மே 11ம் தேதி இயற்பியல், எகனாமிக்ஸ் மே 17ம் தேதி கணிதம், விலங்கியியல் மே 19ம் தேதி உயிரியியல், வரலாறு மே 21ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்றும்; காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே