கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்து கொண்டிருந்தனர். 5 பணியாளர்கள், இரண்டு விமானிகள் என மொத்தம் 191 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று இரவு கோழிக்கோடில் கனமழை பெய்தது. விமானத்தை இரவு 7.40 மணியளவில் தரையிரக்க விமானிகள் முயற்சித்தனர். ஆனால் மழை காரணமாக தரையிறக்குவதில் இரு முறை சிக்கல் ஏற்பட்டது.
அதன்பின் மூன்றாவது முறை 10ஆவது ஓடு தளத்தில் தரையிறக்க முயன்றபோது விமானம் சருக்கிச் சென்றுள்ளது. மேலும், ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 விமானிகள் உள்பட 17 ஆக அதிகரித்துள்ளது.
110 பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்தில் விமானத்தின் கேப்டன் தீபக் சாத், துணை விமானி அகிலேஷ் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் கேப்டன் தீபக் சாத், இந்திய விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில், உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.