தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும், சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, மாநிலத்தின் பிற இடங்களில், நாளை முதல் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க, அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், கடைகளில் குளிர்சாதன வசதியை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது என்றும், வாடிக்கையாளர்களுக்கோ பணியாளர்களுக்கோ, காய்ச்சல் அறிகுறி இருந்தால் அனுமதிக்க கூடாது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக இடைவெளி, கிருமி நாசினி ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில், சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதி இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.