காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில், மேற்கொள்ளவுள்ள தூர்வாரும் பணிகளை கண்காணிப்பதற்காக, சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு 67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், 392 தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை கண்காணிப்பதற்காகவும், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தஞ்சை மாவட்டத்துக்கு ககன் தீப் சிங் பேடியும், திருவாரூர் மாவட்டத்துக்கு ராஜேஷ் லக்கானியும், நாகை மாவட்டத்துக்கு சந்திரமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.