முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திருமதி.பா.வளர்மதி அவர்கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் அவர்களும் விரைவில் பூரண நலம்பெற்று இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் முதல்வர் பழனிசாமி மற்றொரு டுவிட்டில் கூறியபோது, சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! என பதிவிட்டுள்ளார்.